வன்னியருக்கு 20% ஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டம்: ராமதாஸ்
First Published : 29 Jul 2010 12:39:00 AM IST
Last Updated :
29 Jul 2010 12:58:36 PM IST
சென்னை, ஜூலை 28: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்காவிட்டால், 1987-ல் நடந்ததைப் போல தமிழகத்தில் மீண்டும் வன்னியர்களின் பெரும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வன்னியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் 25 சதவீத இடங்களில் உள்ளனர். ஆனால், 20 சதவீதம் உள்ள வன்னியர்களுக்கு 6 சதவீதம் கூட கிடைக்கவில்லை. தமிழகத்தின் 6 கோடி மக்களில் 2 கோடி மக்கள் வன்னியர்களாக உள்ளனர். இவ்வளவு பெரிய சமுதாய மக்கள் பின்தங்கி இருந்தால், அதனால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கும். 1973-ல் முதல்வராக இருந்த கருணாநிதி நியமித்த சட்டநாதன் கமிஷன், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 17 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீட்டை பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை. இந்நிலையில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆகஸ்ட் மாதம் ஒரு வார கால சாலை மறியல் போராட்டத்தில் வன்னியர் சங்கம் ஈடுபட்டது. அந்த போராட்டத்தில் 30 பேரின் உயிரை பறிகொடுத்தோம். அதன் தொடர்ச்சியாகத்தான் 1989-ல் அமைந்த தி.மு.க. அரசு, வன்னியர் உள்ளிட்ட 107 ஜாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பிரித்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, வன்னியர்களுக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமில்லாதது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். எனினும், அதே தி.மு.க. அரசுதான் இப்போது அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்துள்ளது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் இனி எந்த தடையும் இருக்க முடியாது. இப்போதுள்ள இடஒதுக்கீட்டில், 7 சதவீதம் மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. எனவே, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க முதல்வர் கருணாநிதி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.